`அவன் ஒரு முதுகெலும்பில்லாதவன்’ என்று சிலரைக்குறித்து சிலர் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால், உண்மையில் முதுகெலும்பு இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. முதுகுத்தண்டு பலமாக இருந்தால்தான் ஒரு மனிதனால் இயல்பாக வாழ முடியும். முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையென்றால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. முதுகுத்தண்டில் லேசாக அடிபட்டாலே சம்பந்தப்பட்டவர்களால் இயல்பாக இருக்க முடியாது. இப்படியிருக்க உலக அளவில் முதுகு வலி தினம் அல்லது முதுகுத்தண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி மற்றும் வேறு பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க உணவில் அடிக்கடி உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மூட்டு மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படும் வலி, வீக்கத்தைக் குறைத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியது உளுந்து. குறிப்பாக தோலுடன் கூடிய கருப்பு உளுந்தில் பிளேவனாய்டுகள் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் புரதச்சத்து போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 40 கிராம் வரை புரதச்சத்து உள்ளது. புரதச்சத்து என்பதைவிட மருத்துவ தாவர வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன. ஆர்தரைட்டிஸ் எனும் மூட்டு வலிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உளுந்தில் உள்ளது. நரம்புகளை வலுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. எலும்புமுறிவு பிரச்சினைக்கு கருப்பு உளுந்து, நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து பற்று போட்டால் பலன் கிடைக்கும். இது அல்லாமல் பிரண்டைத்துவையல்கூட எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்லது.
முதுகுவலி, முதுகுத்தண்டு விலகியிருப்பது போன்ற பிரச்சினைகளுக்கு பிரண்டையுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து எண்ணெய்விடாமல் நன்றாக வதக்கி பொறுக்கும் சூட்டில் பற்று போட்டால் பலன் கிடைக்கும். நொச்சி இலையை அரைத்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்து வந்தாலும் முதுகு வலி பிரச்சினைகள் சரியாகும். முதுகில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பல வழிகள் இருக்கின்றன.
எம்.மரிய பெல்சின்,
மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617