சாத்தான்குளத்தில் ஒராண்டுக்கும் மேல் வராத தனியார் பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். போலீசார் சமரசம் செய்து வைத்து, பேருந்தை அனுப்பி வைத்தனர்.
நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், நாசரேத், சாத்தான்குளம் வழியாக முதலூர், பொத்தகாலன்விளை, மணிநகர், தட்டார்மடம், படுக்கப்பத்து பெரியதாழைக்கு தனியார் பேருந்து சென்று வந்தது. இந்த பேருந்து காலை, மாலை என இருவேளை இயக்கப்பட்டதில் கிராம மக்கள் பெரிதும் பயன் அடைந்தனர். அந்த பேருந்து நிர்வாகத்தை மாற்றியதையடுத்து நெல்லையில் இருந்து வரும் இந்த பேருந்து சாத்தான்குளம் வந்து கிரராமங்கள் வழியாக பெரியதாழைக்கு செல்லாமல் சாத்தான்குளத்தில் இருந்து மீண்டும் நெல்லைக்கு திரும்பி சென்றது.
கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக முதலூர், பொத்தகாலன்விளை, மணிநகர், தட்டார்மடம், பெரியதாழைக்கு இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டாதல் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனியார் பேருந்தை மீண்டும் கிராமங்கள் வழியாக பெரியதாழைக்கு இயக்கிடவும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தனியார் பேருந்து மீண்டும் இயக்கப்படாமல் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை சென்றது.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென் மண்டல பொறுப்பாளர் லூர்துமணி தலைமையில் கிராம மக்கள் 30க்கு மேற்பட்டோர் நேற்று மாலை சாத்தான்குளம் பஸ் நிலையம் வந்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பெரியதாழை செல்லும் வழித்தடத்தில் இயக்கிடுமாறு வலியுறுத்தினர்.
ஆனால் டிரைவர், மற்றும் கண்டக்டர் பேருந்து பெரியதாழை பகுதிக்கு அதன் உரிமையாளர் தெரிவிக்காததால் இயக்க மறுத்தனர். இதனால் கிராம மக்களுக்கும் தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கிராம மக்கள் பஸ்சில் ஏறி, பெரியதாழை செல்ல கிராமங்கள் வழியாக இயக்கிடவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிரைவர், கண்டக்டர் பேருந்து உரிமையாளரிடம் செல்லிடபேசியில் பேசியதையடுத்து பேருந்து பெரியதாழைக்கு இயக்கிட சம்மதித்தனர். இதனையடுத்து வந்திருந்த கிராம மக்களுடன் பேருந்து பெரியதாழைக்கு சென்றது. பேருந்தை தொடர்ந்து பெரியதாழைக்கு இயக்குவதாக உறுதி அளித்தனர்.
1ஆண்டாக வராத பேருந்து மீண்டும் வந்ததையடுத்து படுக்கப்பத்து, பெரியதாழையில் பேருந்திற்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் லூர்துமணி, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, ஒன்றிய கவுன்சிலர் ஜேசு அஜீட், சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்னகணேசன், சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க செயற்குழு உறுப்பினர் சித்திரை சகாய செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.