இந்திய மற்றும் தமிழ் கலாச்சார முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டியில் குழந்தைகள்,பெண்கள் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.கோவை காளபட்டி பகுதியில் நம்ம ஊரு தாறுமாறு எனும் தலைப்பில் இந்திய மற்றும் தமிழ் கலாச்சார முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டி நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை கூறும் விதமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஆடை அணிந்த 50க்கும் மேற்பட்ட மாடல்கள் மேடையில் அணி வகுப்பு நடத்தினர்.வழக்கமாக நவீன ஆடைகளுடன் இளம்பெண்களை ஃபேசன் ஷோவில் பார்த்து பழகியவர்கள் மத்தியில், இந்த போட்டியில் இந்திய நாட்டின் பல்வேறு மாநில கலாச்சார உடை அணிந்து ஒய்யார நடை நடந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.