கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுற்றுப்புறப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுரையின் பேரில், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் கவிதா தலைமையில், சுகாதார ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் இன்று காலை கிழக்கு மண்டல பகுதிக்கு உட்பட்ட திருமுருகன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டுமான பணி நடைபெறும் பகுதிகள், வீடுகளில் ஆய்வு செய்ததில், ட்ரம் மற்றும் பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவ காரணமாக இருந்த உரிமையாளர்கள் 6 பேருக்கு 1.52 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.