உத்தரபிரதேச அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. நாட்டின் பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தை துவங்கி வைக்கவுள்ள நிலையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் அயோத்திக்கு படையெடுக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஆம் ஆத்மீ கட்சியின் எம்.பி’யுமான ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவது என்பது வேறுவிதமான விஷயம் என குறிப்பிட்டு, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்பதே சரியான விஷயம் என்றார். தற்போது இந்த கோவில் கட்டப்படுவது என்பது நம் வாழ்நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் என்ற ஹர்பஜன், இதனால் நாம் அனைவரும் அங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
யார் அங்கு சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் கூட தனக்கு கடவுள் ராமர் மீது நம்பிக்கை உண்டு என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான் என்றும் இதனால் நான் ராமர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்வேன் என உறுதிபட தெரிவித்தார்.
எந்தக் கட்சி அங்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் எனது நிலைப்பாடு என்பது ஒன்று தான், நான் கோவிலுக்கு செல்வேன் என தெரிவித்த ஹர்பஜன், நான் அயோத்தி ராமர் கோவில் செல்வதில் யாருக்காது பிரச்சனை என்றால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறி தான் அயோத்தி சென்று ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவேன் என கூறினார்.