இன்றைய அவசர உலகில் பாரம்பரியங்கள் அனைத்தையும் மறந்து அவற்றை வெறும் நினைவலைகளாக, புத்தகங்களாக, புகைப்படங்களாக, ஒளிப்படங்களாக, திரைப்படங்களாக பார்த்துக்கொண்டிருக்கும் நாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி பார்க்கிறோம். ரொம்பவே காலம் கடந்த ஞானோதயம்தான் என்றாலும் இப்போதாவது விழித்துக்கொண்டோமே என்று நினைக்கும்போது பரவாயில்லையே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.
அந்தவகையில், நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் என்னென்ன என்று கேட்டால் நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்? அரிசி என்றதும் புழுங்கலரிசி, பச்சரிசிதான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் போனால் இட்லி அரிசி, பிரியாணி அரிசிதான் தெரியும் நம் மக்களுக்கு! அந்த அளவுக்கு நமது பாரம்பரிய அரிசி ரகங்களை நாம் மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. கார் அரிசி, கவுனி அரிசி, சம்பா – மாப்பிள்ளைச்சம்பா அரிசி வரிசையில் மூங்கில் அரிசி பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் நம்மில் யார் யாருக்கெல்லாம் தெரியும்?
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூ பூக்கும் மூங்கில் மரங்களின் பூவிலிருந்து வரும் காய்களையே மூங்கில் நெல், அரிசி என்கிறோம். இத்தகைய மூங்கில் அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். கொடிய, மோசமான நோய்கள் எல்லாம் விலகி ஓடிவிடும். நல்லதொரு ஆரோக்கியம் கிடைக்கும். உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும் மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாம். பழந்தமிழர்கள் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தேன், தினைமாவு போன்றவை முக்கிய உணவாக இடம் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகிறது.
மூலிகை ஆராய்ச்சியாளர்,
மரிய பெல்சின்